லாரி மீது ஜீப் மோதி விபத்து: உளவுதுறை டி.எஸ்.பி.க்கள் 2 பேர் பலி
லாரி மீது ஜீப் மோதி விபத்தில் ஆந்திர மாநில உளவுதுறை டி.எஸ்.பி.க்கள் 2 பேர் பலியாகினர்.;
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம், யாதாத்ரி மாவட்டம், சவுட்டுப்பல் மண்டலத்தில் உள்ள கைதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு ஜீப் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் எதிர்திசையில் சென்று, விஜயவாடா நோக்கி சென்ற லாரி மீது மோதியது.
இதில் ஜீப்பின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் ஜீப்பில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சவுட்டுப்பல் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரில் சிக்கியிருந்த 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விபத்தில் சிக்கி பலியானது ஆந்திர மாநில உளவுத்துறையில் பணி புரிந்து வந்த டி.எஸ்.பி.க்கள் சக்ரதர் ராவ், சாந்தராவ் என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் கூடுதல் எஸ்.பி. பிரசாத், டிரைவர் நர்சிங் ராவ் என்பதும் தெரியவந்தது. மேலும் பணி நிமித்தம் சென்றபோது போலீசாரின் கார், முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது தடுப்புச்சுவரில் மோதி பின்னர் எதிர்திசையில் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.