ஆலங்குடியில் குருவார வழிபாடு.. தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குரு பகவான்
குருவார வழிபாட்டை முன்னிட்டு குருபகவான் மற்றும் பிற தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.;
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில், வியாழக்கிழமை தோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் வியாழக்கிழமையான இன்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி சௌந்தரநாயகி அம்மன் சமேத கரும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.