திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற 23-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது.;

Update:2025-08-13 04:48 IST

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா 25-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

இத்திருவிழாவையொட்டி முதல் நாளான நாளை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது. மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 18-ந் தேதி 5-ம் திருநாளன்று மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

7-ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

8-ம் திருநாளான 21-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற 23-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இவ்விழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் சுகுமாறன் தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் நாகவேல், தாசில்தார் பாலசுந்தரம், நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பக்தர்கள் வசதிக்காக திருவிழா நாட்களில் தட்டுப்பாடு இன்றி குடிதண்ணீர் வழங்கவும், தடையின்றி மின்சாரம் வழங்கவும், முக்கிய திருவிழா நாட்களான வருகிற 20-ந் தேதி முதல் 23-ந் தேதி 10-ம் திருநாள் தேரோட்டம் வரை நெல்லை, தூத்துக்குடி, சாத்தான்குளம், நாகர்கோவில் மார்க்கத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். திருவிழா நாட்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசாரும், முக்கிய விழா நாட்களில் 750-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேரோடும் வீதிகளில் உள்ள தற்காலிக கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றவும் முடிவு செயய்ப்பட்டது. கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன், போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜசேகர், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்