கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நாளையுடன் நிறைவு
களப பூஜை நாளை நிறைவடைந்தபின், நாளை மறுநாள் காலை உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் என்ற பிரம்மாண்ட ஹோமம் நடக்கிறது.;
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் திருவாவடுதுறை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்க குடத்தில் களபம் மற்றும் வாசனை திரவியங்கள் நிரப்பி அம்மனுக்கு களப அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன்பிறகு இன்று வரை 11 நாட்களும் தினமும் காலை 10 மணிக்கு களப அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளிக் குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி அந்த கலவையால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. 12-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை)யுடன் ஆடி களப பூஜை நிறைவடைகிறது.
நாளை காலை 10 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்கம் சார்பில் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடக்கிறது.
அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க வெள்ளி குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்குள் கொண்டு சென்று வெள்ளிக்குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு களப அபிஷேகம் நடக்கிறது. இந்த களப அபிஷேகத்தை மாத்தூர் மட தந்திரி சஜித் சங்கரநாராயணரரூ முன்னிலையில் கோவில் மேல்சாந்திகள் நடத்துகிறார்கள்.
பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் வளர்ந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நற்பணி சங்கத்தின் சார்பில் அன்னதானம் நடக்கிறது. இந்த அன்னதானத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க பொருளாளரும் கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலருமான வைகுண்டபெருமாள் தொடங்கி வைக்கிறார். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது.
இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
களப பூஜை நாளையுடன் நிறைவடைந்தபின், நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் என்ற பிரம்மாண்ட ஹோமம் நடக்கிறது. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள தெற்கு மண்டபத்தில் யாக குண்டம் அமைத்து மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ தலைமையில் கோவில் மேல் சாந்திகள் ஹோமத்தை நடத்துகிறார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினரும், பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்கத்தினரும் இணைந்து செய்துவருகின்றனர்.