ஆவணி மாத ஞாயிறு வழிபாடு.. இந்த ஆலயத்தில் நாகர் சிலைகளுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம்

நாகராஜா கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவம் நடக்கிறது.;

Update:2025-08-18 12:40 IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக நாகர்கோவில் நாகராஜா ஆலயம் திகழ்கிறது. நாகதோஷ நிவர்த்தி தலமாக இந்த தலம் திகழ்கிறது. நாகர்கோவில் நகரின் மையத்தில் இருக்கிறது, நாகராஜா கோவில். கிழக்கு பார்த்து அமைந்த ஆலயம் என்றாலும், தென் திசையில் உள்ள கோபுரம்தான், பிரதான கோபுரம் ஆகும். கிழக்கு வாசல் வழியாகவும் கோவிலுக்குள் வர முடியும். என்றாலும் தெற்கு திசையில் உள்ள கோபுர வாசலைத்தான் பக்தர்கள், காலம்காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

நாக வழிபாடு உள்ள ஆலயங்கள் பல இருந்தாலும், அவை எல்லாம் சிவன் கோவிலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கு மூலவரே நாகராஜராக இருப்பதும், கருவறையானது நாகங்கள் வசிப்பதற்கேற்ப ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டிருப்பதும் விசேஷம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலைக் கூரையைப் பிரித்துவிட்டு, புதிய கூரையை வேய்கிறார்கள். கேரள கட்டிட பாணியில் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கோவிலை நாகங்களே பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது.

கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளனர். மூலவா நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக் கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக்கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக்கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

நாகராஜர் சன்னிதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னிதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும். அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது. இத்தல காசி விஸ்வநாதருக்கு சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்கள் விசேஷமானவை. இந்த இரு தினங்களிலும் காசி விஸ்வநாதர் மற்றும் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னிதிக்கு எதிரிலேயே கொடி மரம் இருக்கிறது. தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்த கிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தை மாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும். பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம்.

இங்கு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் பிரசித்திப் பெற்றது. ஆவணி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம். இவ்வாலயத்தில் தினமும் காலை 10 மணிக்கு மூலவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்