2025ம் ஆண்டு தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பத்தை தமிழ் ஆர்வலர்கள் தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்திற்கு செப்டம்பர் 2ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கவேண்டும்.;
தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித்துறையால் 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் "தமிழ்ச் செம்மல்" விருது வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2025ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள்/ கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அது தொடர்பான விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு 2.9.2025-க்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் நேரில் தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.