இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டிய தமிழ்நாடு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உறுதிமொழியை காப்பாற்றியுள்ளார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்ற இலக்கை முதல்-அமைச்சர் நான்கே ஆண்டகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் 7 அம்ச உறுதிமொழிகளை வெளியிட்டு மக்களிடம் வாக்கு கேட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் முதல் அம்சம், பொருளாதாரம். “வளரும் வாய்ப்புகள்-வளமான தமிழ்நாடு அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்க பொருளாதாரத்தை எட்டுவது முதல் இலக்கு” என்று உறுதியளித்தார்.
அவரது வாக்குறுதியை நம்பி வாக்களித்து தன்னை முதல்-அமைச்சராக்கிய மக்களுக்காக ஓயாது உழைத்து, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியடைய வைத்து, தான் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றியுள்ளார். திருச்சி சிறுகனூரில் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் உறுதியளித்த நாள் 2021 மார்ச் 7.
தமிழ்நாடு 11.29% என்ற இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டியிருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரத்துறை அறிவித்துள்ள நாள் 2025 ஆகஸ்ட் 5. பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்ற இலக்கை முதல்-அமைச்சர் நான்கே ஆண்டகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆகையால்தான் இந்தியாவிலேயே முதன்மை முதல்-அமைச்சராகத் திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.