மகளிர் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு: 14 ஆயிரம் ஆண்களிடம் பணத்தை திரும்ப பெற மராட்டிய அரசு முடிவு

14 ஆயிரம் ஆண்கள் மாதம் தோறும் 1,500 ரூபாய் பெற்று வருவது கண்டறியப்பட்டது.;

Update:2025-07-27 03:00 IST

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் 'லாட்கி பகின்' (அன்பு சகோதரி) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த திட்டம் தான் பா.ஜனதா தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்ததாக அந்த கூட்டணி தலைவர்களே கூறினர்.தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதால் பயனாளிகள் தேர்வு பணி அவசர கோலத்தில் செய்து முடிக்கப்பட்டது.

அப்போது இதை பயன்படுத்தி தகுதியற்ற பலர் திட்டத்தில் இணைந்தது தெரியவந்தது. குறிப்பாக அரசு வேலை செய்யும் பெண்கள் பலர் இந்த திட்டத்தில் சேர்ந்து இருந்தனர். அவர்களின் பெயர்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் சுமார் 14 ஆயிரம் ஆண்கள் மோசடியாக இந்த திட்டத்தில் இணைந்து மாதாமாதம் ரூ.1,500 உதவித்தொகை பெற்று வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ஏழை பெண்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட 'லாட்கி பகின்' திட்டத்தில் ஆண்கள் பயனாளிகளாக இருக்க முடியாது. முறைகேடாக திட்டத்தில் சேர்ந்ததின் விளைவாக அவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை நாங்கள் திரும்ப பெறுவோம். அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்