துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்

பாஜக வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-08-18 14:46 IST

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 21ம் தேதி கடைசி நாள் ஆகும். துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மராட்டிய கவர்னராக செயல்பட்டு வருகிறார். அதேவேளை, பாஜக கூட்டணி தமிழகத்தை சேர்ந்தவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ள நிலையில், எதிக்கட்சிகள் கூட்டணியாக இணைந்து தமிழகத்தை சேர்ந்தவரையே துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பாக வேண்டுகோள்

நமது பாரதத்தின் துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மராட்டிய கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியா கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணை ஜனாதிபதி வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.

இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-ல் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பட்நாயக்கிற்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்!

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்