மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 50,000 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.;

Update:2025-08-18 16:40 IST

சேலம்,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது வேகமெடுக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக மாநிலத்தின் மலைநாடு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. விநாடிக்கு 20,000 கன அடி நீர் வரும் நிலையில், அருவி மற்றும் ஆற்றின் கரையோரம் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

இன்று மாலை 4 மணிக்கு, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 22,000 கன அடியில் இருந்து 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்து வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 50,000 கன அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்