ரூ.15 லட்சம் பேரம்... கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற மனைவி
மேவலூர் குப்பத்தில் அரிகிருஷ்ணன் பிரியாணி கடை வைத்து உள்ளார்.;
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பத்தை சேர்ந்துவர் அரிகிருஷ்ணன். அதேபகுதியில் பிரியாணி கடை வைத்து உள்ளார். இவரது மனைவி பவானி (39). இவரும் பிரியாணி கடையில் கணவனுக்கு உதவியாக இருந்து வந்தார். அரிகிருஷ்ணன் பிரியாணி கடைக்கு இறைச்சி மற்றும் பொருட்கள் வாங்க அடிக்கடி மனைவி பவானியை கடையில் விட்டு செல்வார்.
அப்போது கடையில் வேலை பார்த்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த அரிகிருஷ்ணன் கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தார். இதில் மனைவி பவானி, கள்ளக்காதலன் மதன் குமாருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பதிவானது.
இதையடுத்து அரிகிருஷ்ணன் தனது மனைவி பவானியை கண்டித்து கடையில் வேலைபார்த்த மதன்குமாரை இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று நிறுத்திவிட்டார். இதனால் கள்ளக்காதலர்கள் ஒன்றாக சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதையடுத்து தவிப்புக்குள்ளான பவானி கள்ளகாதலன் மதன்குமாருடன் சேர்ந்து இடையூறாக இருக்கும் கணவன் அரிகிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்காக கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து திருவாரூர் பகுதியை சேர்ந்த கூலிபடையினரை அணுகி ரூ.15 லட்சம் பேரன் பேசி ரூ.2 லட்சம் முன்பனம் கொடுத்தனர். இதனை அறியாத அரிகிருஷ்ணன் வழக்கம்போல் மனைவியுடன் பேசியபடி பிரியாணி கடைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் மேவலூர் குப்பம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றனர். இதில் அரிகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது கூலி படையினர் அரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசியபோது, "உன் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்ய ரூ.15லட்சம் பேரம் பேசி ரூ.2லட்சம் கொடுத்து உள்ளார். நீ எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்" என்று மிரட்டி உள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன அரிகிருஷ்ணன் இது பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்குப்பதிவு செய்து அரிகிருஷ்ணனின் மனைவி பவானி, அவரது கள்ளக்காதலன் மதன்குமார் ஆகியோரை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் கூலிப்படையை ஏவி அரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து பவானி, கள்ளக்காதலன் மதன்குமார், கூலிப்படையை பற்றி கொடுத்த தகவலின்படி கூலிப்படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டதை சேர்ந்த விக்னேஷ், விஜய், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.