சார்ஜாவில் இருந்து கோவைக்கு ரூ.37 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் கடத்தல் - 5 பேரிடம் விசாரணை
கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் சோதனை நடைபெற்றது.;
கோவை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து பயணிகளிடம் தீவிர சோதனை நடைபெற்றது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையின்போது 5 பயணிகள் எலெக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த சிகிரெட்டுகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 5 பயணிகளையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.