தூத்துக்குடி: மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், மேலூர், கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த அந்தோணிமிக்கேல் ஸ்டாலின், கடம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், மேலூர், கிருஷ்ணராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்த ஜேசுராஜ் மகன் அந்தோணிமிக்கேல் ஸ்டாலின் (வயது 49), கடம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜெசிந்தா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். அந்தோணி மிக்கேல் ஸ்டாலின் நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் இரவில் வீட்டுக்கு செல்லாமல் அலுவலகத்தின் கணினி அறையில் உள்பக்கமாக கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
நேற்று காலை அலுவலக ஊழியர்கள் வந்து கதவை தட்டியபோது அவர் கதவை திறக்கவில்லையாம். உடனடியாக ஊழியர்கள் கடம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ஊழியர்கள் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்தோணிமிக்கேல் ஸ்டாலின் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் அந்தோணி மிக்கேல் ஸ்டாலின் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.