சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
கோப்புப்படம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கூத்தங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் வினோத் (17 வயது). இவர் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வினோத் நேற்று காலை பைக்கில் அம்மாபேட்டை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அம்மாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அவர் வைத்திருந்த சாவி கீழே விழுந்ததால் அதை பைக்கில் இருந்தபடியே எடுப்பதற்காக ஒரு கையால் அருகில் நின்ற இரும்பு குழாயை பிடித்தபடி குனிந்தார். அப்போது அந்த இரும்பு குழாயில் ஏற்கனவே மின்கசிவு இருந்ததால் வினோத் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் கீழே விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வினோத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை கமலக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.