ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று காலமானார்.;
கோப்புப்படம்
சென்னை,
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார். அவருக்கு வயது 79. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த மாலிக், சிகிச்சை பலின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
சத்ய பால் மாலிக் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அமைப்பின் படிநிலைகளினூடே உயர் பொறுப்புகளை வகிக்கும் நிலைக்கு உயர்ந்தாலும், அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் நெஞ்சுரத்தை அவர் வெளிப்படுத்தினார். வகித்த பொறுப்பில் இருந்து அவர் ஓய்வுபெற்றபோதிலும், அவரது மனச்சான்று உறங்கிடவில்லை.
அவர் வகித்த பொறுப்புகளால் மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளாலும் சத்ய பால் மாலிக் அவர்கள் வரலாற்றில் நினைவுகூரப்படுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.