எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்து உடலநலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.;
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. மு.க.முத்து மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் மு.க.முத்து உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
எனது அண்ணன் திரு. மு.க.முத்து அவர்களது மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரில் பங்கெடுத்து ஆறுதல் சொன்ன சகோதரர் செல்வப்பெருந்தகை, தோழர் கே.பாலகிருஷ்ணன், சகோதரர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொகிதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, வசீகரன், சகோதரர் துரை வைகோ, சகோதரி தமிழிசை சவுந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,
சத்யராஜ், விக்ரம் உள்ளிட்ட கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் - ஊடகவியலாளர்கள், நேரில் வர முடியாத சூழலில் தொலைபேசி வாயிலாக இரங்கலைப் பகிர்ந்துகொண்ட சகோதரர் ராகுல் காந்தி, ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் மற்றும் எனது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த சீமான் உள்ளிட்ட அனைவர்க்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.