ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற இடைக்கால தடை

இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.;

Update:2025-07-21 17:16 IST

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளுங்கட்சியான தி.மு.க., ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 1-ந்தேதி இந்த திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த களப்பணியின்போது வாக்காளர்களின் தொலைபேசி எண் மூலம் ஓ.டி.பி. பெறப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் வீடு வீடாக செல்கின்றனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொல்லை கொடுக்கின்றனர்.

எங்கள் வீட்டிற்கு திமுகவினர் 10 பேர் வந்தனர். அவர்கள் எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டில் தமிழக முதல்வர் படத்துடன் 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டினர். பின்னர் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர்

இந்த ஆவணங்களை தர மறுத்தபோது, வீட்டுப் பெண்கள் மாதம் தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாயை நிறுத்திவிடுவதாக மிரட்டினர். அதோடு அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்குகின்றனர். அந்த எண் கொடுக்கப்பட்டதும் ஓரணியில் தமிழ்நாடு பதிவு தகவல் வருகிறது. தொடர்ந்து ஓடிபி வருகிறது. அந்த ஓடிபியை தெரிவித்ததும் திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது.

மேலும் மக்களை திமுகவில் சேர வற்புறுத்தி வருகின்றனர். திமுகவில் சேராமல் போனால் தற்போது பெற்று வரும் அரசு திட்டங்கள் நிறுத்தப்படும் என்கின்றனர். இதனால் மக்கள் பலர் விருப்பமில்லாமல் கட்டாயத்தின் பேரில் தனிப்பட்ட தகவல்களைப் பகிரவும், திமுகவில் சேர்கின்றனர்.

அரசியல் நோக்கங்களுக்காக ஆதார் தகவல்களைச் சேகரிக்க எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதார் அமைப்பு அனுமதி வழங்கவில்லை. அரசியல் பிரச்சாரத்திற்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது.

திமுகவினர் பொதுமக்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, செல்போன் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை கோருவது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனியுரிமை உரிமைகளை மீறும் செயலாகும். இது ஒரு குற்றச்செயலும் கூட.

எனவே, திமுகவினர் அரசியல் பிரசாரத்துக்காக பொதுமக்களிடமும் இருந்து ஆதார் விபரங்களை சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும், திமுகவினர் பொதுமக்களிடம் இருந்து எந்தக் காரணத்துக்காகவும் ஆதார் விபரங்களை சேகரிக்க கூடாது என்றும், திமுகவினர் இதுவரை சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விபரங்களை உடனடியாக அழிக்கவும், பொதுமக்களிடம் திமுகவினர் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, திமுக பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ. டி.மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் மகேந்திரன், கே. ஆர்.பாரதி கண்ணன் ஆகியோர் ஆஜராகி, குற்றச்சாட்டு தொடர்பான வீடியோவை சமர்ப்பித்தனர்.

அதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், "ஓடிபி எதற்காக கேட்கிறார்கள்? ஓடிபி விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுகையில் எதற்காக கேட்கிறார்கள்?" என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசுத்தரப்பில் அளித்த பதிலில், 'தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், 'நீங்கள் அரசு வழக்கறிஞரா? அல்லது தி.மு.க. வழக்கறிஞரா?' என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "ஆதார் விபரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்க நிறுவனத்திற்கு இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் இவ்வாறுதான் கையாளப்படுவார்களா? தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த திட்டமும், விபரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இது மிகவும் ஆபத்தானது.

தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. தனிநபர் விபரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். அந்த விஷயங்கள் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது?

ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின்போது ஓ.டி.பி.யை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் ஓ.டி.பி. விபரங்களை கேட்கக் கூடாது" என உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும், வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்