சென்னையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

மழையால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.;

Update:2025-07-22 23:51 IST

சென்னை,

தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் (ஜூன்) இறுதியில் ஒரு கிலோ தக்காளி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.7 முதல் ரூ.15 வரை விற்பனை ஆனது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டதை பார்க்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து இம்மாத ஆரம்பத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரையிலும், வெளி மார்க்கெட்டுகளில் ரூ.60 வரையிலும் விற்பனை ஆனது. அதன்பிறகு, விலை சற்று குறையத் தொடங்கியது. அதன்படி, கடந்த 17-ந் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு கீழே வந்து விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் விலை ஏறுமுகத்தை நோக்கி செல்கிறது. நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்திருந்தது. அதாவது கடந்த 2 நாட்களில் மட்டும் தக்காளி கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலேயே அதிகரித்திருந்தது.

வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் இதனைவிட கூடுதலாகவே தக்காளி விலை இருக்கும். சில கடைகளில் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு அதிகளவில் தக்காளி வரத்து இருக்கிறது. சமீப நாட்களாக தென்மேற்கு பருவமழையால் அங்கு அதிக மழை பதிவாகி வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்