தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டம்: 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆலையின் ஆதரவாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2025-07-22 22:07 IST

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆலையின் ஆதரவாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா கொடுத்த புகாரில், நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் போக்குவரத்து இடையூறு செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதில் ஸ்டெர்லைட் ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் அனைவரும் 100க்கும் மேற்பட்ட வேன்களில் வந்து, போக்குவரத்திற்கு இடையூறாக வேன்களை நிறுத்திய டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.

இதையடுத்து ஸ்டெர்லைட் அதிகாரிகள் 5 பேர், 3 வழக்கறிஞர்கள் மற்றும் 53 வேன் டிரைவர்கள், 20 ஆட்டோ டிரைவர்கள், மகளிர் குழு தலைவிகள், மீனவர் அமைப்பினர், ஆலை ஆதரவாளர்கள் உட்பட 1000 பேர் மீது 126 (2), 189(2) பிஎன்எஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் விசாணை நடத்தி வருகிறார். மேலும் இதுதொடர்பாக தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுகிர், மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்