பேயை விவாகரத்து செய்துவிட்டு மக்கள் பிசாசை திருமணம் செய்கிறார்கள் - திமுக, அதிமுக மீது சீமான் விமர்சனம்
தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பிசாசு வேண்டாம் என்று பேயை 5 ஆண்டுகள் கட்டி கொள்கின்றனர். அடுத்தமுறை பிசாசை விவாகரத்து செய்துவிட்டு பேயை திருமணம் செய்கிறார்கள். அதிமுக வரக்கூடாது என திமுகவுக்கும், திமுக வரக்கூடாது என அதிமுகவுக்கும் மாறி மாறி மக்கள் வாக்களிக்கிறார்கள்.அ.தி.மு.க. வைத்து தி.மு.க.வை எப்படி ஒழிக்க முடியும்? தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது.
மக்கள் விழித்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும், கூட்டணியால் அல்ல. அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக தி.மு.க. பயணிக்கிறது. அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் தி.மு.க., அ.தி.மு.க. பயணிக்கிறது.அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது. திரை வெளிச்சத்தில் அவ்வப்போது சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருப்பார்கள்.
தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வாக்குகள்தான். பெருந்துறை, கோவை தெற்கில் வட இந்தியர்கள் வாக்களித்தால் வெற்றி என்ற நிலை உள்ளது. தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது. வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தரக்கூடாது. நான் இருக்கும் வரை அது நடக்காது என்றார்.