பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குறித்து போலி செய்தி - தமிழக அரசு எச்சரிக்கை
போலி செய்தி பரப்புவோர் மீது பள்ளிக்கல்வித்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வுக்கு சென்றதாகவும், அப்போது போதையில் இருந்த ஆசிரியருக்கு முதல் உதவி அளித்ததாகவும், பள்ளியின் நுழைவு வாயில் அருகே போதை மாத்திரை விற்றுக்கொண்டிருந்தவர்களை எச்சரித்ததாகவும் சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருகிறது.
இதனை பலரும் கேலி, கிண்டல் செய்து பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பற்றி போலிச் செய்தி பரப்பப்படுகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது பள்ளிக்கல்வித்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.