மதுரை: கடந்த 7 மாதங்களில் உணவுப்பொருள் கடத்தல் வழக்குகளில் 6,272 பேர் கைது

ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.;

Update:2025-08-04 20:50 IST

மதுரை,

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு பொது வினியோகத்திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது. அவ்வாறு, வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள், இதுதொடர்பாக ரோந்து பணி மேற்கொண்டு, அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் ஜூலை மாதம் 31-ந்தேதி வரை உள்ள 7 மாதங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைள் மூலமாக மொத்தம் 6,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 2,342 டன் பொது வினியோகத் திட்ட அரிசி, 13,720 லிட்டர் பொது வினியோக திட்ட மண்எண்ணெய், 1,725 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் இதர 64 வழக்குகளுடன் அத்தியாவசிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 84 லட்சத்து 41 ஆயிரம் ஆகும். இந்த குற்றங்களில் ஈடுபட்ட 6,272 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது வினியோகத்திட்ட பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 1,362 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 2,880 வாகனங்கள் அரசுக்கு அபராதத் தொகை செலுத்திய பின் விடுவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாத பொருட்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் கீழ் 70 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதுபோன்று ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்க 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்