எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று பொய் பிரசாரம் செய்கிறார் - மு.க.ஸ்டாலின் தாக்கு

7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.;

Update:2025-08-03 08:44 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது;

நெடுநாள் கழித்து, உங்களுடன் இந்த மடல் வாயிலாக உரையாடுகிறேன். காரணம், சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்தேன். சிகிச்சை ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் என்னுடைய வழக்கமான பணிகளைத் தொடங்கியும், நேற்று அண்ணா அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' என உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன். அரசுப் பணிகளுக்கிடையில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுவரையில் 39 தொகுதிகளின் கழக நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது.

தமிழே உயிராக - தமிழர் வாழ்வே மூச்சாக - தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக மக்கள் மனங்களில் நிறைந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து 7 ஆண்டுகளானாலும் அவர்தான் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். வாரத்தின் 7 நாட்களும் தலைவர் கலைஞரின் நினைவுகளுடன்தான் திமுக உடன்பிறப்புகளின் பொழுது விடிகிறது. எந்நாளும் நம்மை இயக்கும் ஆற்றலாகத் திகழ்பவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.

நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு பயனையாவது பெற்று முன்னேற்றம் கண்டு வருவதை நாடறியும். கல்வியிலும் சமுதாய முன்னேற்றத்திலும் தனிநபர் வருமானத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகக் திகழ்வதை நாம் மட்டும் சொல்லவில்லை, மத்திய பாஜக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு துறைகளின் அறிக்கைகளே உறுதி செய்கின்றன. இவையனைத்தும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் கட்டமைத்த வழித்தடத்தில் தொடரும் நம்முடைய பயணத்தின் வெற்றிகள்.

தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அதிமுக தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது. உண்மையான அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதிபெற்ற தமிழுக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்குகிற தமிழர் விரோத பாஜக அரசு, சமஸ்கிருத மொழிக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டிக் கொடுக்கிறது. இந்தி அல்லாத மொழிகளைச் சிதைக்கின்ற வகையில் 'தேசியக் கல்விக் கொள்கை 2020' மூலம் இந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கிறது. ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கின்ற கல்வியைப் பறிக்கின்ற வகையில் குலக்கல்வி முறையைக் கொண்டு வரத் துடிக்கிறது. அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய பாஜக அரசு வெளியிட மறுக்கிறது. ஆரியப் பண்பாட்டை நம் மீது திணிக்கப் பார்க்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் இன்று நம்முடன் இருந்திருந்தால் எத்தகைய உணர்வெழுச்சியுடன் மத்திய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற நாமும் அதே உணர்வுடன் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத - மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவோ அடங்கி ஒடுங்கி பாஜகவுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது.

எப்போதும் மக்களுடன் நிற்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தலைவர் கலைஞர் கட்டிக் காத்த இயக்கம். அவர் இல்லை என்று எண்ணாமல், என்றென்றும் அவர் நினைவுகளில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் உங்களில் ஒருவனான நானும் இருக்கிறேன். ஆகஸ்ட் 7-ம் தேதி நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவைப் போற்றுவோம்.

வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுடன் நிரந்தர ஓய்வு கொண்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் அமைதிப் பேரணியில் உடன்பிறப்புகள் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலைகளுக்கு அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும். கிளைகள்தோறும் தலைவர் கலைஞரின் நினைவு போற்றப்பட வேண்டும். இந்நிகழ்வுகளில் கழக நிர்வாகிகள் காலை 7 மணியளவில் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வீடுகளிலும் வீதிகளிலும் தமிழ்காத்த போராளியாம் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள். தலைவர் கலைஞரின் நினைவுகளை நெஞ்சிலேந்தி, கொள்கைவழிப் பயணத்தைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் 7-வது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் வெல்வோம்! தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக! திராவிட முன்னேற்றக் கழகம் வெல்க '

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்