பழங்கால ஐம்பொன் விஷ்ணு சிலையை இலங்கைக்கு கடத்த முயற்சி: 2 பேர் கைது
தூத்துக்குடியில் ஐம்பொன் சிலை கடத்த முயன்றவர்களிடம் விசாரித்தபோது சிலைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்தது.;
தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, இரண்டாம் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் திரேஸ்புரம், அண்ணா காலனியில் நேற்று (2.8.2525) மாலை ரோந்து பணிக்கு சென்றனர்.
அப்போது அவர்கள் அங்கே, இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பழங்காலத்து ஐம்பொன் விஷ்ணு சிலையை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட இருந்த தூத்துக்குடி மாவட்டம், ஏரல், கொற்கை, பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த மரியயாகப்பன் மகன் அந்தோணிராஜ் (வயது 52), ஏரல் தாலுகா, கொட்டாரக்குறிச்சி, பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் பாலமுருகன்(35) ஆகிய 2 பேரை கைது செய்து மேல் விசாரணைக்காக தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிய வருகிறது. மேலும் அவர்களிடம் விசாரித்தபோது, ஐம்பொன் சிலைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்தது.