இன்ஸ்டாகிராமில் வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது

ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update:2025-08-03 07:34 IST

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர், மேலஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் நவீன்ஹரிஷ் (வயது 23) என்பவர் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்ஹரிஸை (1.8.2025) கைது செய்து அவரிடமிருந்த ஒரு வாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ அல்லது ஆயுதங்களை வைத்துக்கொண்டோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து ரவுடித்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆயுதச் சட்டத்தின்படி 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 197 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்