பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளரை கைது செய்தது செல்லாது: சென்னை ஐகோர்ட்டு அதிரடி
கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்காதது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது என நீதிபதி குறிப்பிட்டார்.;
தமிழக பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பண மோசடி, ஆள் கடத்தல் தொடர்பாக, கோவை குனியமுத்தூர், துடியலூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும், அலெக்ஸிஸ் சுதாகர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை, அறிவுரை கழகம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, மூன்று வழக்குகளிலும், அலெக்ஸிஸ் சுதாகர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மூன்று வழக்குகளிலும் கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகளை ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில், அலெக்ஸிஸ் சுதாகர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், "மனுதாரரிடம் மூன்று வழக்குகளில் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல, குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு விரோதமானது. எனவே, அலெக்சிஸ் சுதாகரை கைது செய்து, சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது," என உத்தரவிட்டார்.