ஜெயங்கொண்டம் பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி
தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.;
அரியலூர் மாவட்டம் குடந்தை மறை மாவட்டம் ஜெயங்கொண்டம் மறை வட்டம் நகரில் வீற்றிருக்கும் தூய பாத்திமா அன்னை ஆலய 62 ஆம் ஆண்டு பெருவிழா திருப்பலியோடு துவங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஜெயங்கொண்டம் மறை வட்ட முதன்மை குரு ஜோசப் கென்னடி முன்னிலை வகித்தார். திருவிழா திருப்பலி நிகழ்ச்சிக்கு கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குரு கோஸ்மான் ஆரோக்கியராஜ் மற்றும் ஜெயங்கொண்டம் மறை வட்ட குருக்கள் ஆகியோர் தலைமை வகித்தனர் .
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து ஆடம்பர தேர் பவனி தொடங்கியது. பாடல் குழுவினர்களின் பாடல்களுடன் பேருந்து நிலையம் சாலை, அண்ணா சிலை, கடைவீதி, 4 ரோடு வழியாக வலம் வந்த தேர், மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை நடைபெற்றது. .
தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் சூரியமணல், சூசையப்பர்பட்டினம், விழப்பள்ளம், வடவீக்கம், மைக்கேல்பட்டி, உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.