கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை மறுநாள் ஆடி களப பூஜை
கன்னியாகுமாி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.;
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத களப பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி களபபூஜை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
முதல்நாள் களபபூஜை காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கும் தங்க குடத்தில் வாசனைத்திரவியங்கள் நிரப்பி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதேபோல் 5-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து களப பூஜை நடக்கிறது. 16-ந்தேதி உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடைபெறுகிறது.
இதையொட்டி தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, உச்சிகால பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு களப அபிஷேகம், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதனை தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவில் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.