ஆடி 3-வது வெள்ளி: குமரியில் அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி 3-வது வெள்ளியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.;
தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி நிறை புத்தரிசி பூஜை, ஆடி களபபூஜை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆடி மாதத்தில் நடக்கும் இந்த முக்கிய விசேஷ நாட்களில் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடுவார்கள். மேலும் இந்த ஆடி மாதத்தில் பெண் பக்தர்கள் அம்மனுக்கு கொழுக்கட்டை, கூழ் படைத்து வழிபடுவார்கள்.
குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருமளவு திரள்வார்கள்.
அப்போது பெண் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அதேபோல இந்த ஆண்டு ஆடி 3-வது வெள்ளியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதிகளில் உள்ள முத்தாரம்மன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில், உச்சினி மாகாளியம்மன், சுந்தரி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி 3வது வெள்ளியை யொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.
ஆடி 3-வது வெள்ளியையொட்டி தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.