120 அடியை எட்டும் பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணை மீது சென்று பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு,
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் மீண்டும் பவானி ஆற்றில் உபரி தண்ணீர் திறந்து விடப்படும்.
நேற்று இரவு 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.08 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 758 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நாளை 120 அடியை எட்டும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.00 மணிக்கு 101.28 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் நாளை (04.08.2025) 102 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு அன்று வழக்கமாக பவானிசாகர் அணை மீது சென்று பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி ஆடிப்பெருக்கான இன்று பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.