சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் 'டபுள் டக்கர்' பஸ்கள்
முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னையில் 1970-களில் இரட்டை அடுக்கு பஸ்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டன. சுமார் 10 ஆண்டுகள் இந்த பஸ்கள் சென்னையில் ஓடின. அதன்பிறகு 1980-களில் இரட்டை அடுக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் 1997-ம் ஆண்டில் இரட்டை அடுக்கு பஸ்கள் மீண்டும் சென்னையில் ஓடத் தொடங்கின. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அவை பயணிகளை ஏற்றிச் சென்றன. கடைசியாக உயர்நீதிமன்றம் - தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன.அதன்பிறகு இதுவரை சென்னையில் இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னையில் மீண்டும் இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை இரட்டை அடுக்கு பஸ்கள் வழக்கமான பயணிகள் பயணத்துக்கும், சுற்றுலாப் பயணத்துக்கும் பயன்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னை நகரச் சாலைகளில் ஒரு காலத்தில் பயணிகள் மிகவும் விரும்பிப் பயணம் செய்த இரட்டை அடுக்கு பஸ்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இந்த முறை அவை தினசரிப் பயணத்துக்கு மட்டுமல்லாமல், சென்னை நகரச் சுற்றுலாவுக்கும் பயன்படுத்தப்பட உள்ளன. சுற்றுலா செல்வதற்கு பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் வார நாட்களில் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை நகரச் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த பஸ்கள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்படும். வழித்தடத் திட்டமிடல் மற்றும் கட்டண நிர்ணயம் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்படும். இரட்டை அடுக்கு மின்சாரப் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. சாதாரண மின்சாரப் பஸ்களைவிட 1.5 மடங்கு அதிகமாக, கிட்டத்தட்ட 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. சென்னையில் மாநகரப் பஸ்களில் அடிக்கடி நெரிசல் காணப்படும் நிலையில், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இந்த இரட்டை அடுக்கு பஸ்கள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.