கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடுமை... நிற்கதியாக நிற்கிறேன்... காதல் கணவர் மீது பெண் புகார்
கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடுமைப்படுத்துகிறார் என்று காதல் கணவர் மீது பெண் புகார் அளித்துள்ளார்.;
குமரி,
நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 36). இவர் நாகர்கோவில் கூடுதல் மகிளா கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நானும், வடிவீஸ்வரத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் உமா சங்கரும் (40) கடந்த 2007-ம் ஆண்டு கழுகுமலையில் உள்ள இந்து கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது கணவரின் நகைக்கடையில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவருக்கும் எனது கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
அவரது தூண்டுதலின் பேரில் என்னை கணவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொடுமைப்படுத்தினார். அத்துடன் என் கணவரும் அந்த பெண்ணும் சட்டவிரோதமாக கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் நான் நிற்கதியாக நிற்கிறேன். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகர்கோவில் மகளிர் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார், பிரபாவின் கணவர் உமா சங்கர் மற்றும் அவரது கள்ளக்காதலி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.