முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை வருகிறார்.;

Update:2025-08-10 07:04 IST

கோவை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொள்வதுடன், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் கட்சியினருடன் ஆலோசனை செய்வதுடன், ரோடுஷோ நடத்தி மக்களையும் சந்தித்து வருகிறார். கடந்த 22, 23-ந்தேதி கோவை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை வருகிறார். சென்னையில் இருந்து மாலை 5.25 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு கோவை விமானநிலையம் வந்தடைகிறார். விமானநிலையத்தில் அவருக்கு கோவை, திருப்பூர் மாவட்டங்கள் சார்பில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். அதன்பின்னர் மாலை 6.50 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நரசிங்கபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு இரவு 8.50 மணிக்கு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்று இரவில் உடுமலைப்பேட்டையில் தங்குகிறார்.

நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்டஉதவிகளை வழங்கி பேசுகிறார்.பின்னர் பகல் 12 மணிக்கு பொள்ளாச்சிக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலின், அங்கு காமராஜர், வி.கே.பழனிசாமி கவுண்டர் சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோரது உருவச்சிலைகளை திறந்து வைக்கிறார். பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் வி.கே.பழனிசாமி அரங்கத்தினை ரிப்பன்வெட்டி திறக்கிறார். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாதிரி வடிவத்தை பார்வையிடுகிறார்.இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பகல் 12.15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து கார் மூலம் கோவை வருகிறார். கோவை விமானநிலையத்தில் இருந்து பகல் 2.10 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி கோவை நகரில் 500 போலீசாரும், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் 800 போலீசார் உள்பட மொத்தம் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்