2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்: மு.க.ஸ்டாலின் சூளுரை
ஊர் ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி பொய் பேசுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழகினார்.
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், ஊராட்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல ஆணைகள், மகளிர் திட்டம், தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 19 ஆயிரத்து 785 பேருக்கு, ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிட மாடல் அரசின் சார்பில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜின் அயராத முயற்சியே காரணம். அவருக்கு எனது பாராட்டுகள். நான் கொடுக்கும் வேலையை அமைதியாக சாதித்து காட்டக் கூடியவர் அமைச்சர் சாமிநாதன்.
இயற்கை எழில் கொஞ்சும் உடுமலைப்பேட்டையில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெறுகிறது. சர்க்கரையை அள்ளித் தரும் இனிப்பான ஊர் உடுமலைப்பேட்டை. அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் செய்த ஒரு திட்டத்தை அவர்களால் கூற முடியுமா?. திருப்பூரில் 5 பாலங்களை கட்ட கலைஞர் உத்தரவு பிறப்பித்தபோது அதிமுக ஆட்சியில் அதை முடக்கினர்.
திமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.10,491 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்துக்காரர் என சொல்லிக்கிற எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை விட, நம்ம திராவிட மாடல் ஆட்சியில்தான் மேற்கு மண்டலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் அதிக திட்டங்கள், சாதனைகள் செய்துள்ளோம். 2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்.
சுந்தரா டிராவல்ஸ் பஸ்சை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி பொய் பேசுகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடையே ஹிட் ஆனதால் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மையார் என்று தன்னை நினைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்; பாவம் அவருக்குத் தெரியவில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடுவது தவறு என்று சொல்லி, அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் நன்கொடை தருமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அவர்களுக்கு அவமானமாக இல்லையா?. தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி எந்நாளும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.