தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தை காலிசெய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலிசெய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரி, உரிமையாளர்களர்கள் சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறோம். குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டிடத்துக்கான வாடகையை 6 லட்சம் ரூபாயில் இருந்து 13 லட்சம் ரூபாயாக உயர்த்துகிறேன். இந்த வாடகை கூடுதல் தொகையான 2.18 கோடி ரூபாயை வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் மனுதாரர்களுக்கு அரசு வழங்க வேண்டும். 2 ஆண்டுகளில் கட்டிடத்தில் இருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை காலி செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.