உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை

மனநல நிறுவனங்கள் அல்லது மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.;

Update:2025-08-12 17:00 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள்/ மையங்கள் (Mental Health Establishments) செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள்/ மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் கீழே குறிப்பிட்டுள்ள அலுவலகத்தில் பதிவு செய்ய ஒருமாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகம்: முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -600 010, தொலைபேசி எண்: 044-26420965, Email: tnsmha@gmail.com விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி: https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php

மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை மேற்சொன்ன இணையதள முகவரியிலோ தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 044-2642 0965- என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இதன்படி பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் / நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் மேற்சொன்ன தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்