ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.;
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். ஆனால், நாளை (24.7.2025) ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளில் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.