மைசூர் மகாராஜா பிறந்தநாள் விழா: திருமலையில் பாரம்பரிய முறைப்படி நடந்த பல்லவோற்சவம்
கர்நாடக சத்திரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு மைசூர் மகாராஜாவின் வம்சத்தினர் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மைசூர் மகாராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், பல்லவோற்சவம் என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமலை கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திர நாளில் பாரம்பரிய முறைப்படி இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கன பல்லவோற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சகஸ்ர தீபாலங்கார சேவையைத் தொடர்ந்து ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமி, கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி, அங்கு கர்நாடக அரசு சார்பாகவும், மைசூரு சமஸ்தானத்தின் சார்பாகவும் அளிக்கப்பட்ட முறைப்படியான வரவேற்பு மற்றும் மரியாதைகளை ஏற்றுக் கொண்டார். மைசூர் மகாராஜாவின் வம்சத்தினர் ஆரத்தி எடுத்து மலையப்ப சுவாமியை வழிபட்டனர்.
பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நைவேத்தியம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் ஜெங்கா கிருஷ்ணமூர்த்தி, நரேஷ், கோவில் துணை செயல் அதிகாரி லோகானந்தம், பேஷ்கார் ராமகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் பயன்படுத்தப்படும் தந்த பல்லக்கு, ஏராளமான நிலம் மற்றும் நகைகள், பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றை மைசூர் மகாராஜா நன்கொடையாக அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன.