டிரைவருடன் கண்டக்டர் பணிக்கு 27-ந் தேதி எழுத்து தேர்வு
21-ந் தேதி முதல் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர், கண்டக்டர் புதிய நியமனம் இல்லை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு நியமனம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக 3,274 டிரைவருடன் கண்டக்டர் (டி.சி.சி.) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதன் மூலம், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டிரைவருடன் கண்டக்டர் (டி.சி.சி.) பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 27-ந் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உட்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) ஜூலை 21-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.