விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா..? - பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக கூட்டணியில், நினைத்துப் பார்க்க முடியாத பிரம்மாண்ட கட்சி சேர உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் கடந்த 7-ந்தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சுற்றுப்பயணத்தின்போது அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே மு.க.ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சி விழுப்புரத்தில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சியில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் நட அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வளவு அசிக்கப்பட்டும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம். அதிமுக கூட்டணியில், நினைத்துப் பார்க்க முடியாத பிரம்மாண்ட கட்சி சேர உள்ளது" என்றார்.
ஏற்கனவே அதிமுகவின் கூட்டணி அழைப்பை விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நிராகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். இதனால் அந்த பெரிய கட்சி எது என்கிற விவாதம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறினார். அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி அமைக்குமா என்று வினாவிற்கு, யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறினார். அதே சமயம், அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்று பதில் அளித்தார். மேலும், விஜய் இறங்கி வந்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்து விட்டு, தவெகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
பாஜக மற்றும் தவெகவை ஒப்பிட முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பலம் இருப்பதாக தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற வினாவுக்கு, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளையும் வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.