சிறுநீரகத் திருட்டு: மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா தி.மு.க.வினர்? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
சிறுநீரகத்தை கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட தி.மு.க. நிர்வாகி உட்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் தொடர்பிலிருந்த தி.மு.க.வினர், தற்போது சட்டவிரோத சிறுநீரகத் திருட்டு சம்பவங்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பதன் மூலம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையும் கடிக்கும் சூழலுக்கு தி.மு.க.வினர் துணிந்துவிட்டனரா? என்று கேட்கத் தோன்றுகிறது.
எனவே, ஏழைத் தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட தி.மு.க. நிர்வாகி, உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறுநீரகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.