பனையூரில் இருந்துகொண்டு அரசியல் செய்வதா? - விஜய் மீது செல்லூர் ராஜு தாக்கு
திருமாவளவன் திசை தெரியாத காட்டுக்குள் சென்றுவிட்டதாக செல்லூர் ராஜு தெரிவித்தார்.;
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடல்நகர் 2-வது வார்டில் ரூ.25 லட்சத்தில் கரிசல்குளம் கண்மாய் மறுகால் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அமைச்சர் வீட்டில் ரெய்டு எல்லாம் தி.மு.க.வில் புதுசு இல்லை. பல அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மாநகராட்சி விவகாரத்தில் அ.தி.மு.க புகார் அளித்ததன் காரணமாகவே முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாநகராட்சி விவகாரத்தில் குரல் கொடுத்த அ.தி.மு.க. மீது தி.மு.க. நிலைக்குழு தலைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருமாவளவன் திசை தெரியாத காட்டுக்குள் சென்றுவிட்டார். அவருடைய தலைமை பண்பை விமர்சிக்கக்கூடிய அளவில் ஆகிவிட்டார். ஜெயலலிதாவின் பண்பை பேசியவர் திருமாவளவன். திருமாவளவனுக்கு என்ன நெருக்கடி வந்தது என தெரியவில்லை.
விஜய் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்வது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. விஜய் களத்திற்கு வர வேண்டும். எல்லோரும் களத்திற்கு வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று நினைத்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
நாங்கள் வெளியில் வந்தால் இடையூறு ஏற்படும் என திரும்ப திரும்ப சொன்னால் எப்படி? விஜய் வெளியில் வந்து மக்களை சந்திக்க வேண்டும். எல்லாரும் எம்.ஜி.ஆராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். எப்போதும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் வருகிறது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.