ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? - தேர்தல் ஆணையத்துக்கு கி.வீரமணி கேள்வி

இந்திய ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும் அணுகுண்டை ராகுல்காந்தி அம்பலப்படுத்தியுள்ளார் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-10 18:59 IST

சென்னை,

திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘கவர்தல்’ என்னும் தமிழ்ச்சொல்லுக்கு, வசப்படுத்துதல், விரும்புதல், பெற்றுக்கொள்ளுதல் என்னும் பொருள்களுடன், கொள்ளையிடல், திருடல் என்றும் பொருள்கள் உண்டு. “வாக்குகளைக் கவர்தல்” என்பதைப் பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் வகையில் புரிந்துகொண்டுள்ளதோ?. சந்தேகத்துக்குரிய வகையில் இந்தியத் தேர்தல்கள் நடைபெறுவதாகக் கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் பல திசைகளில் இருந்தும் எழுந்து வருகின்றன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் முறைகள், தேர்தல் தேதி அறிவிப்புகள், தேர்தல் ஆணையர்களின் நியமனம், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம், கட்சி உடைப்புகளின் போது தேர்தல் ஆணையம் நடந்துகொள்ளும் முறை என்று பலவற்றின் மீதும் சந்தேகங்களும், அதற்கான நியாயமான காரணங்களும் இருப்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாகும்.

அரசியலுக்கும், அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டிய சுதந்திரமான அமைப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். ஆனால், அதன் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

இந்தச் சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில், வெளிப்படையான குற்றச்சாட்டை இந்தியாவைப் பல்லாண்டுகள் ஆட்சி செய்த கட்சியும், தற்போதைய எதிர்க்கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கிறார். 7.8.2025 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை யகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மோசடியைக் காட்சிப் பட விளக்கத்துடன் தெளிவுபடுத்தினார் ராகுல்காந்தி.

அந்த ஒரு தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதாக (Vote chori) அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். புதிய வாக்காளர்கள் என்ற பெயரில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், ஒரே அறை கொண்ட முகவரியில், யாரும் வசிக்காத வீட்டில் எண்ணற்ற வாக்குகள் பதிவு, ஒளிப்படங்கள் இல்லாமல் வாக்காளர் பதிவு, ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்கு, ஒரே வாக்குச்சாவடியில் ஒருவருக்கு இரண்டு வாக்கு, ஒரே நபருக்கு வெவ்வேறு மாநிலங்களில் வாக்கு - இப்படி பல்வேறு வகைகளில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்று அவர் இந்திய ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும் அணுகுண்டை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க எல்லா தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்ய வேண்டியதில்லை. தங்களுக்கு முழு ஆதரவு உள்ள தொகுதிகளை விட்டுவிடலாம். கடுமையான எதிர்ப்பு கொண்ட தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்தால் அம்பலப்பட்டுவிடுவோம் என்று கருத இடம் உண்டு. ஆனால், வெற்றியை முடிவு செய்ய இயலாத தொகுதிகளை கடும் போட்டி நிலவும் தொகுதிகளை முன்கூட்டியே அறிந்து, அதில் இத்தகைய மோசடிகளைச் செய்தாலே போதும் என்று பா.ஜ.க. கணக்கிட்டிருக்கக் கூடும்.

தேர்தல் முன் கணிப்புகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளின் வேறுபாடுகளைக் கடக்க எவ்வளவு தொகுதிகள் தேவையோ அவற்றில் மட்டும் ‘தனிக் கவனம்’ செலுத்தி, வாக்காளர் பட்டியலில் மோசடி செய்தாலே போதுமானது என்பதே பா.ஜ.க.வினரின் கணக்கு! இதைத் தான் ராகுல் காந்தி அவர்களும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி, இத்தகைய கணக்குகளை ஆட்சியின் கண்களையும், காதுகளையும் பயன்படுத்தி அறிந்து, அவற்றில் மட்டும் ‘கவனம்’ செலுத்துவதைத் தனது தேர்தல் உத்தியாக வைத்துள்ளது.

ராகுல் காந்தியின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?. பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்