சுதந்திர தினத்தில் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்; மோடிக்கு வைரமுத்து கோரிக்கை

இந்தியாவின் 79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில் திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.;

Update:2025-08-02 08:40 IST

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார். டெல்லி செங்கோட்டையில் உரையாற்றும் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உரையில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை பகிர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை சுதந்திர தினத்தன்று வெளியிட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

"மாண்புமிகு

இந்தியப் பிரதமர் அவர்களே!

தங்களின்

விடுதலைத் திருநாள் பேருரைக்கு

மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த

தங்கள் மாண்புக்கு

என் ஜனநாயக வணக்கம்

தமிழ்நாட்டிலிருந்து

ஓர் இந்தியனாக எழுதுகிறேன்

தாங்கள்

காலமெல்லாம் போற்றிவரும்

திருக்குறள்

இனம் மொழி மதம் நாடுகடந்த

உலகத்தின் அசைக்கமுடியாத

அறநூல்

மனிதம் என்ற

ஒற்றைக் குறிக்கோளை

உயர்த்திப் பிடிப்பது

அதனை

இந்தியாவின் தேசிய நூலாக

அறிவிக்க வேண்டும் என்பது

தமிழர்களின் நீண்ட கனவு

மற்றும்

நிறைவேறாத கோரிக்கை

இந்தியாவின்

79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்

திருக்குறள்

இந்தியாவின் தேசிய நூலாக

அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை

வெளியிட வேண்டுகிறோம்

தாங்கள்

கேட்டுக்கொண்ட வண்ணம்

நமோ செயலியிலும்

இதனைப் பதிவிடவிருக்கிறோம்

இது

உலகப் பண்பாட்டுக்கு

இந்தியா கொடுக்கும் கொடை

என்று கருதப்படும்;

ஆவனசெய்ய வேண்டுகிறோம்

ஆகஸ்ட் 15 அன்று

தொலைக்காட்சி முன்னால்

ஆவலோடு காத்திருப்போம்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்