திருவண்ணாமலை: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது.;
திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டு ஊராட்சி காட்டுப்புத்தூர் காலனியைச் சேர்ந்தவர் பழனி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பார்கவி. இவர்களது மகள் பிரவீனா 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். மகன் முகிலனுக்கு 2 வயதாகி இருந்தது. நேற்று முன்தினம் முகிலன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் முகிலன் தவறி விழுந்து விட்டான். சற்றுநேரம் கழித்து தாயார் பார்கவி வந்தபோது, தண்ணீர் தொட்டியில் முகிலன் மூச்சுத்திணறி மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் முகிலனை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் முகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.