நாளை தொடங்குகிறது கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக (ஜூலை 22, 23) வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இது போக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக். படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
இந்தநிலையில், பி.வி.எஸ்சி., ஏ.எச்., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், 14ம் தேதி வெளியானது. இப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு, நாளை காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளதால் சிறப்பு பிரிவை சேர்ந்த மாணவர்கள் மட்டும் 8 மணிக்கே கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வுகள் www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் நடைபெற உள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக (ஜூலை 22, 23) வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.