முதல்-அமைச்சருக்கு நாளை சில மருத்துவ பரிசோதனை - உதயநிதி ஸ்டாலின்
முதல்-அமைச்சரை 2 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளனர் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று நடைபயற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலை நடைபயிற்சியின் போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனைகளுக்காக கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் இருந்துள்ளது. 2 நாளில் சரியாகி வீடு திரும்புவார். முதல்-அமைச்சரை 2 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளனர். முதல்-அமைச்சருக்கு நாளை ஒரு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்றார்.