புதிதாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு விண்ணப்பம்
கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமம், அச்சமாபுரம் கிராமங்களில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.;
FILEPIC
சென்னை,
தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 2 இடங்களில் புதிய மணல் குவாரி திறக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. இதன்படி கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் வடக்கு கிராமம் மற்றும் அச்சமாபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது.
காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவது அடிப்படையில் இரண்டு மணல் குவாரியும் அமைக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. நெரூர் வடக்கு மணல் குவாரியில் இருந்து 2 ஆண்டுகளில் 3,21,000 மீட்டர் க்யூப், அச்சமாபுரம் மணல் குவாரியில் இருந்து 4,80,000 மீட்டர் க்யூப் மணல் எடுக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.