தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்; அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
இனி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.;
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல, திரைப்பட நடிகர் நடிகைகளும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 13-வது நாளாக இன்றும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, அனுமதிக்கப்படாத இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் இன்று 8-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளர்கள், “பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையொட்டி அமைச்சர்கள், மேயரை சந்தித்து பேசினோம். ஆனால் எங்கள் கோரிக்கை பற்றி பேச முடியாது என ஆணவத் திமிரில் அரசு இருந்தால் அதற்கான பதிலை நாங்கள் தருவோம். நாங்கள் தொடர்ந்து போராடுவோம், முடிந்தால் எங்களை அப்புறப்படுத்துங்கள். எங்கள் போராட்டம் தொடரும். இனி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம்” என்று தெரிவித்துள்ளனர்.