கன்னியாகுமரி: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 52,098 மனுக்கள்: கலெக்டர் தகவல்
கன்னியாகுமரியில் கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை கடந்த 15.7.2025 அன்று துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டம் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில் இன்று கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் நகராட்சி வார்டு 10, 11, 12 உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் துரிதமாக கணினியில் பதிவேற்றம் செய்திட முகாம் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் நமது மாவட்டத்தில் 15.7.2025 முதல் 12.8.2025 வரை 102 முகாம்கள் நடத்தப்பட்டு 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளின் அருகாமையில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், கல்குளம் வட்டாட்சியர் ஜாண்ஹெனி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.